Sunday, November 12, 2023

Sri Damodara Ashtakam Stotram in Tamil - ஶ்ரீ தாமோதராஷ்டகம்

Sri Damodarastakam lyrics in Tamil – ஶ்ரீ தாமோதராஷ்டகம்



(இந்த தாமோதர அஷ்டகம் கிருஷ்ண த்வைபாயன வியாசரால் பத்ம புராணத்திலிருந்து எடுக்கப்பட்டு, நாரத முனிவர் மற்றும் சௌனக ரிஷியின் உரையாடலில் சத்யவ்ரத முனிவரால் பேசப்பட்டது.)
"கார்த்திகை மாதத்தில் தாமோதரரை வழிபட்டு, தாமோதர அஷ்டகம் என்று அறியப்படும் இந்த பாடலை தினமும் பாராயணம் செய்ய வேண்டும், சத்யவ்ரத முனிவரால் பேசப்பட்ட இது பகவான் தாமோதரரை கவர்கின்றது." (ஸ்ரீ ஹரி-பத்தி-விலாசம் 2.16.198)

நமாமிஸ்வரம் சச்-சித்-ஆனந்த-ரூபம்
லஸத்-குண்டலம் கோகுலே ப்ராஜமானம்
யசோதா-பியோலூஹலாத் தாவமானம்
பராம்ருஷ்டம் அத்யந்ததோ த்ருத்ய-கோப்யா ॥ 1 ॥

1) நிரந்தர வாழ்க்கை அறிவு, மற்றும் ஆனந்தம் உடையவரும் கோகுலத்தில் பிரகாசமான அழகுடன் இருப்பவரும், தனது தாய் மோவர கடைந்து அதிலுள்ள வெண்ணையை உரியில் வைக்க, அந்த உரியில் உள்ள பானையை உடைத்து வெண்ணையை திருடி உண்ட முழுமுதற் கடவுளே, மேற்கண்ட குற்றத்திற்காக தாய் யசோதை உங்களை உரலில் கட்டிப்போட முயல அைவரிடம் இருந்து தப்பி ஓட இறுதியில் அதிவேகத்தில் வந்த அன்னை யசோதையிடம் மாட்டிக் கொண்டீர்கள். முழுமுதற் கடவுளாகிய தாமோதரா, எனது பணிவான வணக்கங்களை நான் உங்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.

ருதந்தம் முஹுர் நேத்ர-யுக்மம் ம்ருஜந்தம்
கராம்போஜ-யுக்மேன சாதங்க - நேத்ரம்
முஹு: ஸ்வாஸ - கம்ப - த்ரிரேகாங்க - கண்ட
ஸ்தித்-க்ரைவம் தாமோதரம் பக்தி - பத்தம் ॥ 2 ॥

2) தனது தாயின் கையில் உள்ள பிரம்பை கண்டு அழுது, தனது தாமரை போன்ற கரங்களை கொண்டு இரண்டு கண்களையும் கசக்குகிறார். கண்கள் பயத்தால் நிரம்ப, மூன்று கோடுகள் கொண்ட வெண் சங்கைப் போன்ற கழுத்தை சுற்றியுள்ள முத்துக்கள் பதித்த அட்டிகையானது வேகமாக அவர் மூச்சை விட்டு விட்டு அழும்போது அங்கும் இங்கும் அவரது கழுத்தில் புரள்கிறது. இத்தகைய முழுமுதற் கடவுள் ஸ்ரீ தாமோதரர் அன்னை யசோதையின் கயிற்றால் அல்ல, அவரின் அன்பினாலேயே கட்டப்பட்டார். இத்தகைய பகவானுக்கு எனது பணிவான வணக்கங்களை சமர்ப்பிக்கிறேன்.

இதீத்ருக் ஸ்வ-லீலாபிர் ஆனந்த-குண்கடே
ஸ்வ-கோஷம் நிமஜ்ஜந்தம் ஆக்யாபயந்தம்
ததீயேஷித-நேஷு பக்தைர் ஜிதத்வம்
புன: ப்ரேமதஸ் தம் சதாவ்ருத்தி வந்தே ॥ 3 ॥

3) இதேபோல தனது குழந்தைப் பருவ லீலைகளினால், கோகுல வாசிகளை பேரானந்தப் பெருங்கடலில் ழூழ்கடிக்கிறார். அச்சம், மரியாதை போன்ற எண்ணங்களுக்கெல்லாம் அப்பாற்ப்பட்ட, தூய அன்போடும், நட்பொடும் அவரை இதயத்தில் ஏற்றுக் கொண்டவர்களாலேயே அவர் ஜெயிக்கப்படுகிறார். தனது கம்பீரமான பரமநிலையின் அறிவில் மனம் லயிக்கின்ற பக்தர்களுக்கு மட்டும் அவர் தன்னை வெளிப்படுத்துகிறார். மிக உயர்ந்த அன்போடு மீண்டும் மீண்டும் எனது பணிவான வணக்கங்களை சமர்ப்பிக்கிறேன்.

வரம் தேவ மோக்ஷம் ந மோக்ஷாவதிம் வா
ந சான்யம் வ்ருணே அஹம் வரேசாத் அபீஹ
இதம் கத வபுர் நாத கோபால-பாலம்
சதா மே மனசி ஆவிரஸ்தாம் கிம் அன்யை: ॥ 4 ॥

4) ஓ, பகவானே! அனைத்து வகையான வரங்களை அளிக்கக் கூடியவராக இருந்தாலும், அரூபமான விடுதவையோ, நிரந்தர வாழ்க்கையோ கொண்ட வைகுண்ட லோகத்திற்கான விடுதலையோ எனக்கு வேண்டாம். ஓ பிரபுவே! விருந்தாவனத்தில் உள்ள உமது பால கோபாலனான உருவத்தையே என் மனதில் பதிய வைக்க நான் விரும்புகிறேன். இதற்க்கு மேல் எந்த வரத்தை வாங்கி என்ன பிரயோஜனம்?

இதம் தே முகாம்போஜம் அத்யந்த-நீலைர்
வ்ருதம் குண்டலை: ஸ்நிக்த-ரக்தைஸ் ச கோப்யா
முஹுஸ் கும்பிதம் பிம்ப-ரக்தாதரம் மே
மனஸி ஆவிராஸ்தாம் அலம் லக்ஷ்-லாபை: ॥ 5 ॥

5) பிரபு! தாமரையைப் போன்ற உங்களுடைய முகமானது, கருகருவென்ற மிருதுவான முடிக் கொத்துகளினால் சூழப்படும் பொழுது, அன்னை யசதாவால் மாறி மாறி முத்தமிடப்படுகிறது. உங்களுடைய உதடுகள் கோவைப் பழம் போல் சிவந்துள்ளது. இத்தகைய அழகான உங்கள் முகம் எப்பொழுதும் எனது மனதில் தோன்றுவதாக. ஆயிரக்கணக்கான பிற எந்த நன்மைகளினாலும் எனக்கு ஒரு பிரயோஜனமும் இல்லை.

நமோ தேவ தாமோதரனந்த விஷ்ணோ
ப்ரஸீத ப்ரபோ துக்க -ஜாலாப்தி-மக்னம்
க்ருபா-த்ருஷ்டி-வ்ருஷ்ட்யாதி-தீனம் பதானு
க்ருஹாணேச மாம் அங்ஞம் ஏதி அக்ஷீ-த்ருஸ்ய: ॥ 6 ॥

6) முழுமுதற் கடவுளே, உமக்கு எனது வணக்கங்கள், ஓ தாமோதரா! ஓ அனந்தா! ஓ விஷ்ணு! ஓ பிரபு! என்மேல் கருணை காட்டும். உனது கருணையை என்மேல் பொழிவதன் மூலம், பரந்த துன்பக் கடலில் ழூழ்கியுள்ள ஏழை முட்டாளாகிய எனது கண்களுக்கு நீர் காட்சி தர வேண்டும்.

குவேராத்மஜௌ பத்த-மூர்த்யைவ யத்வத்
த்வயா மோசிதௌ பக்தி-பாஜௌ க்ருதௌ ச
ததா ப்ரேம-பக்திம் ஸ்வகாம் மே ப்ரயச்ச
ந மோக்ஷே க்ரஹோ மே அஸ்தி தாமோதரேஹ ॥ 7 ॥

7) ஓ, பகவான் தாமோதரா! குபேரனுடைய இரண்டு மகன்களான மணிக்ரீவன், நளகூவரன் நாரத முனிவரின் சாபத்திலிருந்து விடுவிக்கப்பட்டு, மர உரலோடு கட்டப்பட்ட உமது குழந்தை உருவத்தினால் கவரப்பட்டு மிக உயர்ந்த பக்தர்களானார்கள். அதேபோல, உமது பிரேம பக்தியை எனக்குக்கொடும். இதற்காகவே நான் காத்திருக்கிறேன். வேறு எவ்வித விடுதலையிலும் எனக்கு ஆசையில்லை.

நமஸ்தே ஸ்து தாம்னே ஸ்புரத்-திப்தி-தாம்னே
த்வதீயோதராயாத விஸ்வஸ்யே தாம்னே
நமோ ராதிகாயை த்வதீய-ப்ரியாயை
நமோ நந்த-லீலாய  தேவாய துப்யம் ॥ 8 ॥

8) ஓ, பகவான் தாமோதரா! உமது வயிற்றைக் கட்டுகின்ற பளபளப்பான, காந்தியுள்ள கயிற்றுக்கு முதலில் என்னுடைய மரியாதை கலந்த வணக்கங்கள். முழு பிரபஞ்சத்திற்க்கும் இருப்பிடமாகிய உம்முடைய வயிற்றுக்கும், உமக்கு மிகவும் பிரியமான ஸ்ரீ மதி ராதாராணிக்கும், அளவில்லா லீலைகள் புரியும் முழுமுதற் கடவுளாகிய உமக்கும் எனது மரியாதை கலந்த வணக்கங்களை சாஷ்டாங்கமாக சமர்ப்பிக்கிறேன்.

இதி ஶ்ரீமத்பத்மபுராணே ஶ்ரீ தாமோதராஷ்டாகம் ஸம்பூர்ணம் ॥


No comments:

Post a Comment