Thursday, February 2, 2023

Vel Vaguppu lyrics in Tamil - வேல் வகுப்பு

வேல் வகுப்பு



பருத்தமுலை சிறுத்தஇடை வெளுத்தநகை
    கறுத்தகுழல் சிவத்தவிதழ் மறச்சிறுமி
        விழிக்குநிக ராகும்...... 1

பனைக்கமுக படக்கரட மதத்தவள
    கசக்கடவுள் பதத்திடுநி களத்துமுளை
        தெறிக்கவர மாகும்...... 2


பழுத்தமுது தமிழ்ப்பலகை யிருக்குமொரு
    கவிப்புலவன் இசைக்குருகி வரைக்குகையை
        யிடித்துவழி காணும்...... 3

பசித்தலகை முசித்தழுது முறைப்படுதல்
    ஒழித்தவுணர் உரத்துதிர நிணத்தசைகள்
        புசிக்கவருள் நேரும்...... 4

சுரர்க்குமுநி வரர்க்குமக பதிக்கும்விதி
    தனக்கும்அரி தனக்குநரர் தமக்குகுறும்
        இடுக்கண்வினை சாடும்...... 5

சுடர்பருதி ஒளிப்பநில வொழுக்குமதி
    ஒளிப்பஅலை யடக்குதழல் ஒளிப்பவொளிர்
        ஒளிப்பிரபை வீசும்...... 6

துதிக்குமடி யவர்க்கொருவர் கெடுக்கஇடர்
    நினைக்கினவர் குலத்தைமுத லறக்களையும்
        எனக்கோர்துணை யாகும்...... 7

சொலற்கரிய திருப்புகழை யுரைத்தவரை
    யடுத்தபகை யறுத்தெறிய வுருக்கியெழு
        மறத்தைநிலை காணும்...... 8

தருக்கிநமன் முருக்கவரின் இருக்குமதி
    தரித்தமுடி படைத்தவிறல் படைத்தஇறை
        கழற்குநிக ராகும்...... 9

தலத்திலுள கணத்தொகுதி களிப்பினுண
    வழைப்பதென மலர்க்கமல கரத்தின்முனை
        விதிர்க்கவளை வாகும்...... 10

தனித்துவழி நடக்குமென திடத்துமொரு
    வலத்துமிரு புறத்துமரு கடுத்திரவு
        பகற்றுணைய தாகும்...... 11

சலத்துவரும் அரக்கருடல் கொழுத்துவளர்
    பெருத்தகுடர் சிவத்ததொடை யெனச்சிகையில்
        விருப்பமொடு சூடும்...... 12

திரைக்கடலை யுடைத்துநிறை புனர்கடிது
    குடித்துடையும் உடைப்படைய அடைத்துதிர
        நிறைத்துவிளை யாடும்...... 13

திசைக்கரியை முதற்குலிசன் அறுத்தசிறை
    முளைத்ததென முகட்டினிடை பறக்கவற
        விசைத்ததிர வோடும்...... 14
  
சினத்தவுணர் எதிர்த்தரண களத்தில்வெகு
    குறைத்தலைகள் சிரித்தெயிறு கடித்துவிழி
        விழித்தலற மோதும்...... 15

திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன்மலை
    விருத்தனென துளத்திலுறை கருத்தன்மயில்
        நடத்துகுகன் வேலே...... 16

வேல் வகுப்பு (விளக்கம்):
பருத்தமுலை சிறுத்தஇடை வெளுத்தநகை
    கறுத்தகுழல் சிவத்தவிதழ் மறச்சிறுமி
        விழிக்குநிக ராகும்...... 1

ஆழ்ந்த, அகன்ற, நுண்ணியதாய் இருக்கும் வேல், கூரியதாய் நீண்டு ஒளிரும் வள்ளியம்மையின் கண்ணுக்கு ஒப்பாகும். (வள்ளிப் பிராட்டியாரின் கடைக்கண் நோக்கால் விளையும் பயன்களை வேல் அருளும் என்பது குறிப்பாகும்.)
பனைக்கமுக படக்கரட மதத்தவள
    கசக்கடவுள் பதத்திடுநி களத்துமுளை
        தெறிக்கவர மாகும்...... 2

பனை மரம் போல் நீண்ட துதிக்கை, சித்திரங்களோடு விளங்கும் அலங்காரத் துணியை அணிந்துள்ள முகம், கன்னங்களிலிருந்து ஒழுகும் மதநீர்ப் பெருக்கம் ஆகியவற்றோடு, வெண்மை நிறம் வாய்ந்த யானையாகத் திகழும் ஐராவதத்தின் அதிபதியான இந்திரனது கால்களில் பூட்டியிருந்த விலங்கில்… அதனைப் பூட்டுவதற்கு ஆதாரமாக இருந்த ஆணியைத் தெறிக்கச்செய்யும் வேல் ஆற்றல் மிக்க அரமாகும்.

பழுத்தமுது தமிழ்ப்பலகை யிருக்குமொரு
    கவிப்புலவன் இசைக்குருகி வரைக்குகையை
        யிடித்துவழி காணும்...... 3

சிறந்த ஞானத்துடன் பழைமை வாய்ந்த மதுரைத் தமிழ்ச் சங்கப் பலகையில் விளங்கிய ஒப்பற்ற நக்கீரர் இசைத்த திருமுருகாற்றுப்படைக்கு உருகி, அவர் அடைபட்டிருந்த குகையை இடித்துத் தள்ளி அவரை வெளியேற்றும்.

பசித்தலகை முசித்தழுது முறைப்படுதல்
    ஒழித்தவுணர் உரத்துதிர நிணத்தசைகள்
        புசிக்கவருள் நேரும்...... 4

பசியினால் துன்பமுற்றுப் பேய்கள் அங்கங்களை விசைத்தும், விதிர்த்தும், முடக்கியும், உதறியும் புலம்பி உணவு வேண்டி அழுவதைத் தவிர்த்து, அசுரர்களின் வளமிக்க ரத்தத்தையும் சதைகளையும் அவை உண்டு களிக்குமாறு அருளும்.

சுரர்க்குமுநி வரர்க்குமக பதிக்கும்விதி
    தனக்கும்அரி தனக்குநரர் தமக்குகுறும்
        இடுக்கண்வினை சாடும்...... 5

தேவர்கள், முனிவர்கள், இந்திரன், பிரமன், திருமால், உலக மக்கள் ஆகியவர்களுக்கு நேரிடும் துன்பத்தையும், அதற்கு மூலகாரணமான பூர்வகர்ம வினைகளையும் தாக்கி அழிக்கும்.

சுடர்பருதி ஒளிப்பநில வொழுக்குமதி
    ஒளிப்பஅலை யடக்குதழல் ஒளிப்பவொளிர்
        ஒளிப்பிரபை வீசும்...... 6

ஒளிவிடும் சூரியன், குளிர்ந்த கிரணங்களை வீசும் சந்திரன், கடல் பொங்கிக் கரைகடந்து சென்று உலகத்தை அழிக்காதபடி அதனை அடக்கிக் கொண்டி ருக்கும் வடவாமுகாக்கினி ஆகியவற்றை, ‘வேலின் ஒளிப் பிரபாவத்தின் முன் நம் ஒளி எம்மாத்திரம்’ என்று வெட்கப்பட்டு நாணி ஒளியச் செய்யும் வண்ணம், தனது பேரொளிச் சோதியை எங்கும் பிரகாசிக்கச் செய்யும்.

துதிக்குமடி யவர்க்கொருவர் கெடுக்கஇடர்
    நினைக்கினவர் குலத்தைமுத லறக்களையும்
        எனக்கோர்துணை யாகும்...... 7

தன்னைப் புகழ்ந்து போற்றும் அடியார்களை யாராவது கெடுக்க நினைத்து அவர்களுக்குத் துன்பம் இழைக்க மனதில் நினைத்த மாத்திரத்திலேயே, அந்த பகைவரது குலத்தையே வேருடன் அழித்துவிடும். எனக்கு ஒப்பற்ற பெருந் துணையாகி அருள்பாலிக்கும் (ஆகவே, வேலை வணங்குவதையே வேலையாகக் கொண்டவர்களுக்கு மற்றவர்களால் எந்த விதத்திலும் துன்பம் அணுகாது.)

சொலற்கரிய திருப்புகழை யுரைத்தவரை
    யடுத்தபகை யறுத்தெறிய வுருக்கியெழு
        மறத்தைநிலை காணும்...... 8

சொற்களால் விவரிக்க முடியாத பெருமையுடைய முருகனது திருவடியைப் புகழ்ந்து போற்றும் திருப்புகழ்ப் பாக்களை ஓதுபவர்களிடம் நிகழ்கின்ற பகையை அழிக்க, கோபித்து ஆக்ரமித்துக் கிளம்பும்.

தருக்கிநமன் முருக்கவரின் இருக்குமதி
    தரித்தமுடி படைத்தவிறல் படைத்தஇறை
        கழற்குநிக ராகும்...... 9

அலங்கார ஆரவாரத்துடன் அடியார்களின் உயிரைக் கவர யமன் வந்தால், எருக்கம் பூ மாலையையும் சந்திரனையும் சூடிய முடியுடைய சிவபெருமானின் பேராற்றல் மிக்க திருவடிக்கும் ஒப்பாக நின்று உதவும்.

தலத்திலுள கணத்தொகுதி களிப்பினுண
    வழைப்பதென மலர்க்கமல கரத்தின்முனை
        விதிர்க்கவளை வாகும்...... 10

உலகத்தில் உள்ள எல்லா உயிர்களும் பெருமகிழ்ச்சி பெறும் அளவுக்கு உணவளிக்க நேரிடும்போது, மலர்ந்த தாமரை மலருக்கு ஒப்பான முருகன் திருக்கரத்தில் இருந்தபடியே… அவர் அதன் நுனியை லேசாக அசைத்தவுடன், உணவுப் பொருள்களை விளைத்துச் சேகரித்து வளைத்துக்கொண்டு சேர்த்துவிடும். (வேல் பசியைப் போக்கும்; வறுமையின்றி வாழ வைக்கும்; நமது கருத்தறிந்து முடிக்கும்; நாம் நினைப்பதையெல்லாம் நிறைவேற்றும்)

தனித்துவழி நடக்குமென திடத்துமொரு
    வலத்துமிரு புறத்துமரு கடுத்திரவு
        பகற்றுணைய தாகும்...... 11

துணையின்றித் தனியாகச் செல்லும் எனது வலது இடது பக்கங்களிலும், முன் – பின் பக்கங்களிலும் உடன் நின்று இரவு பகல் எப்போதும் துணையாக நின்றருளும்.

சலத்துவரும் அரக்கருடல் கொழுத்துவளர்
    பெருத்தகுடர் சிவத்ததொடை யெனச்சிகையில்
        விருப்பமொடு சூடும்...... 12

சினந்து வந்த அசுரர்களின் உடம்பில் கொழுத்துத் தடித்திருந்த பெரிய குடல்களைச் சிவந்த பூமாலை போல் தனது முடியில் ஆவலோடு சூடிக்கொள்ளும். (வினைகளையும் அடியோடு அழிப்பது வேல் ஒன்றே)
  
திரைக்கடலை யுடைத்துநிறை புனர்கடிது
    குடித்துடையும் உடைப்படைய அடைத்துதிர
        நிறைத்துவிளை யாடும்...... 13

அலைகளை வீசுகின்ற கடலில் உடைப்பு உண்டு பண்ணியும், அதில் நிறைந்துள்ள நீரையெல்லாம் ஒரு நொடியில் குடித்தும், அந்த உடைப்பு முழுவதையும் அடைத்து அங்கு அசுரர்களின் ரத்தத்தை நிரப்பியும் விளையாடும்.

திசைக்கரியை முதற்குலிசன் அறுத்தசிறை
    முளைத்ததென முகட்டினிடை பறக்கவற
        விசைத்ததிர வோடும்...... 14

குலிசாயுதத்துடன் விளங்கும் இந்திரன், முன்னொரு காலத்தில் திசைகளில் உள்ள மலைகளில் இருந்து அறுத்துத் தள்ளிய இறக்கைகள் மீண்டும் அம்மலைகளிடம் முளைத்து விட்டனவோ என்று ஐயுறும்படி, அண்டத்தின் உச்சியிலே அளவிலா வேகத்துடன் எல்லா உலகங்களும் அதிர்ச்சியுற்று நடுங்கும்படி விரைந்து செல்லும். (வேலின் அளவிலா ஆற்றல் அநேக அதிசயம் வாய்ந்தது.)
  
சினத்தவுணர் எதிர்த்தரண களத்தில்வெகு
    குறைத்தலைகள் சிரித்தெயிறு கடித்துவிழி
        விழித்தலற மோதும்...... 15

சினம் கொண்டு அசுரர்கள் எதிர்த்த போர்க் களத்தில் அளவற்ற அறுப்பட்ட தலைகள் சிரிக்கும்படியாகவும், கண்களை உருட்டி விழித்துப் பார்க்கும்படியாகவும், வாய்கள் அலறும்படியாகவும், அசுரர்களோடு சாடும்.

திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன்மலை
    விருத்தனென துளத்திலுறை கருத்தன்மயில்
        நடத்துகுகன் வேலே...... 16

திருத்தணிகையில் உயிர்களின் அக இருள் அகல ஞான சூரியனாகத் தோன்றி அருளும் ஒப்பற்றவனும், குறிஞ்சிக் கிழவனும், உயிருக்குயிராய் எனது உள்ளக் குகையில் உறைபவனும், கருணை உருக்கொண்டு ஆதிக்கு ஆதியாய் நிற்கும் முதல்வனுமான… திரோதான சக்தியாகிய மயிலைச் செலுத்தி நடத்தும் குகப்பெருமானின், ஞானமே உருக்கொண்ட திருவருட் சக்தியாகிய வேலே!

**************************

 

No comments:

Post a Comment