Friday, February 3, 2023

Vel Vanakkam in Tamil - வேல் வணக்கம் - திருப்புகழ்

 வேல் வணக்கம் - திருப்புகழ்


திருப்பரங்குன்றம்

சீர்த்தியாய்த் துதிகள் பாடித் திருவடி(க்கு) மலர்கள் தூவி
ஆர்த்தியாய் வழிபாடாற்றும் அன்பரின் இதயக் கோயில்
மூர்த்தியாய் விளங்கும் எங்கள் முதிர்பரங் குன்றின் வாழ்வாம்
கார்த்திகேயன் கை வேலைக் காண்பதே யெமக்கு வேலை.

திருச்சீரலைவாய் (திருச்செந்தூர்)

முறுவலிற் புரமெரித்த முக்கணன் தனக்கும் கும்பக்
குறுமுனி தனக்கும் போத குருவெனும் அரிய பேறு
பெருமொரு சிறியன் தெய்வப் பிடிமகிழ் கணவன் செந்தூர்
ஆறுமுகன் கரத்துவேலை அடுப்பதே யெமக்கு வேலை.

திருஆவினங்குடி

மாதவன் மகிழ்ந்(து) அளித்த மடந்தையர் இருபால் மேவ
மேதகு மயிலின் மேல் ஓர் வெற்பினில் உதயமான
ஆதவன் எனவே போற்ற ஆவினன் குடியில் வாழும்
நாதன் செவ் வேளின் வேலை நாடுவ(து) எமக்கு வேலை.

பழனி

திண்ணணார் சுவைத்(து) அளித்த தீஞ்சுவைக் கறி சுவைத்த
அண்ணணார் அணைத்துக் கண்ணே! அப்பனே! நீயே நேய
வண்ணமாம் பழம் என்று ஓத மகிழ்ந்து தென் பழனி வந்த
விண்ணவன் கரத்து வேலை விளம்புவ(து) எமக்கு வேலை.

திரு ஏரகம் (சுவாமிமலை)

சென்னி ஆறும் தணிந்த சிவபரஞ் சுடர்க்கு, வேதம்
சொன்ன ஆசிரியனென்று தொல்லுலகனைத்தும் போற்றப்
பொன்னிசூழ் ஏரகத்துப் பொறுப்பினிற் கோயில் கொண்ட
பன்னிரு கையன் வேலைப் பணிவதே எமக்கு வேலை.

குன்றுதோறாடல் (திருத்தணி)

கொன்றைசேர் சடைகள் ஆடக்கொடியிடை உமையாள் காண,
மன்றிலே ஆடல் கொண்ட மகதேவன் வியந்து வாழ்த்தக்,
குன்றுதோறாடல் காட்டும், குமரவேள் மலர்க் கரத்து
வென்றிசேர் சக்தி வேலை வேண்டுவ(து) எமக்கு வேலை.

பழமுதிர்சோலை

புவனம்ஓர் மூன்றும் வாழப் புராரிதன் நுதர்கண் நோக்கில்
அவிர்சுடர் ஒளியாய்த் தோன்றி, அறுமுகத் தேவாய், அன்பர்
பவபயம் ஒழித்துக் காக்கப் பழமுதிர்சோலை மேவும்
சிவசுப்ர மண்யன் வேலை சேவிப்ப(து) எமக்கு வேலை.

கதிர்காமம்

மடமையில் மனந்து வாழ்வாய் வானவர் வணங்கும் தேவாய்க்
குடிமுழு தடிமை கொண்டோன் குறைகளைந்(து) ஆளுங் கோவாய்க்
கடலுல கனைத்தும் போற்றக் கதிர்காம வெற்பின் மேவும்
அடிகளின் கரத்து வேலை அர்ச்சிப்ப தெபக்கு வேலை.

திருப்போரூர்

ஓரூரும் பேரும் இல்லான் உறவோடு பகையும் இல்லான்
ஆரூரன் தூதன் ஆனான், அவன்மகன் முருகன் என்பான்
போரூரிற் கோவில் கொண்டான் புகல் அடைந்தாரைக் காப்பான்
சீரூரும் இவன்கை வேலையே சிந்திப்ப(து) எமக்கு வேலை.

திருத்தனிகை

பண்டாரப் பையன் என்பார், பரிந்(து) அவன் மணந்து கொண்ட
பொண்டாட்டி இருவர் என்பார், பேசும் மெய்த் தெய்வம் என்பார்
கொண்டாடத்தணிகை வெற்பிற் கோவில் கொண்டுள்ளான் என்பார்
தண்டாமல் அவன்கை வேலைத் தரிசிப்ப(து) எமக்கு வேலை.

சென்னிமலை

விருப்பமும் வெறுப்பும் இல்லா விழுமிய முனிவர் தேவர்
திருப்பதம் வணங்கி வாழ்த்தச், செருக்களத்(து) அசுரன் நெஞ்சப்
பொருப்பினைப் பிளந்து, வஞ்சப் பொறுப்பினைத் துளைத்த சென்னிப்
பொருப்பின் கரத்து வேலைப் போற்றுவ(து) எமக்கு வேலை.

குமரகோட்டம்

அப்பனே முருகா நீயே அரன் எனச் சரண் அடைந்தார்
தப்பெலாம் குறியா(து) ஈன்றதாயெனப் பரிவு காட்டும்
பொய்பிலான், குமரகோட்டப் புனிதன் என்(று) உலகம் போற்றும்
ஒப்பிலான் கரத்து வேலை ஓதுவ(து) எமக்கு வேலை.

சிறுவாபுரி (சேக்கிழார் தாசன் இயற்றியது)


வறுமை தீர் வளங்கள் நல்கி வானவர் மண்ணு ளோரும்
தறுகனான் தீமை நீங்கித் தகவுடன் வாழச் செய்த 
சிறுவை தன் வாழ்வாம் எங்கள் ஸ்ரீராமன் மருகனாகும் 
அறுமுகன் கரத்து வேலைப் பணிவதே எமக்கு வேலை.


ஒப்பிலா முக்கண் எந்தை ஒரு சுடர் வடிவாய் வந்து 
செப்பரும் கருணை நல்கி செகமெலாம் புகழும் அந்த 
ஒப்பிலாச் சிறுவை வாழும் உயர் மகிழ் முருகன் வானோர் 
செப்பறு முகத்தான் வேலைச் செபிப்பதே எமக்கு வேலை.

(வேலும் மயிலும் சேவலும் துணை)

கந்தபுராணம் - வாழ்த்து

ஆறிரு தடந்தோள் வாழ்க; அறுமுகம் வாழ்க;
வெற்பைக் கூறுசெய் தனிவேல் வாழ்க; குக்குடம் வாழ்க;
செவ்வேள் ஏறிய மஞ்ஞை வாழ்க; யானைதன் அணங்கு வாழ்க;

மாறிலா வள்ளி வாழ்க; வாழ்க சீர் அடியாரெல்லாம்!

 (வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!)



No comments:

Post a Comment