Friday, January 13, 2023

Kariya Siddhi Malai Lyrics in Tamil - விநாயகர் காரிய சித்தி மாலை பந்தம் அகற்றும் அநந்தகுணப்

விநாயகர் காரிய சித்தி மாலை





விநாயகர் காரிய சித்தி மாலை, ஓர் ஒப்பற்ற மந்திரம். இதனை காஷ்யப முனிவர் வடமொழியில் இயற்றினார். அதை கச்சியப்ப முனிவர் தமிழில் மொழி பெயர்த்தார்.

வேலையில்லா திண்டாட்டம் பெருகி வரும் இந்நாளில் படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்கவும், செய்யும் தொழிலில் இடர்கள் விலகவும், அனைத்து காரியங்களிலும் வெற்றி கிடைக்கவும் மேற்கண்ட விநாயகர் அஷ்டகம் என்னும் காரிய சித்தி மாலை பெரிதும் உதவும்.

கேட்ட வரம் தரும் தனிச்சிறப்புடைய இந்தத் துதியை விநாயகர் முன்பு அமர்ந்து, உள்ளம் ஒன்றிப் பாராயணம் செய்பவர்களின் மனவிருப்பம் எளிதில் நிறைவேறும். சிறப்பு மிக்க இத்துதியை மூன்று வேளைகளிலும் (காலை, மதியம், மாலை) உரைப்பவர்கள் நினைத்த காரியங்கள் கைகூடும்.

அனைத்து வகைகளிலும் வெற்றி உண்டாகும். தொடர்ந்து எட்டு நாட்கள் பாராயணம் செய்து வந்தால் மனதில் மகிழ்ச்சி உண்டாகும். சங்கடஹர சதுர்த்தி திதிகளில் (தேய்பிறை சதுர்த்தி) எட்டுமுறை ஓதினால் அஷ்டமாசித்தி கைகூடும். தினமும் 21 முறை இப்பாடலைப் பாராயணம் செய்வோரின் சந்ததி கல்வியிலும், செல்வத்திலும் மேம்பட்டுத் திகழும் என்பது ஐதீகம்.

காரிய சித்தி மாலை

பந்தம் அகற்றும் அனந்தகுணப் பரப்பும் எவன்பால் உதிக்குமோ
எந்த உலகும் எவனிடத்தில் ஈண்டி இருந்து கரக்குமோ
சந்தமறை ஆகமங் கலைகள் அனைத்தும் எவன்பால் தகவருமோ
அந்த இறையாம் கணபதியை அன்பு கூரத் தொழுகின்றோம். || 1 ||

உலகம் முழுதும் நீக்கமற ஒன்றாய் நிற்கும் பொருள் எவன் இவ்
உலகிற் பிறக்கும் விகாரங்கள் உறாதமேலாம் ஒளியாவான்
உலகம் புரியும் வினைப் பயனை ஊட்டும் களைகண் எவன் அந்த
உலகு முதலைக் கணபதியை உவந்து சரணம் அடைகின்றோம். || 2 ||

இடர்கள் முழுதும் எவனருளால் எரிவீழும் பஞ்சென மாயும்
தொடரும் உயிர்கள் எவனருளால் சுரர்வாழ் பதியும் உறச்செய்யும்
கடவுள் முதலோர்க் கூறின்றிக் கருமம் எவனால் முடிவுறும் அத்
தடவுமருப்புக் கணபதி பொன் சரணம் ஶரணம் அடைகின்றோம். || 3 ||

மூர்த்தியாகித் தலமாகி முந்நீர் கங்கை முதலான
தீர்த்தமாகி அறிந்தறியாத் திறத்தினாலும் உயிர்க்கு நலம்
ஆர்த்திநாளும் அறியாமை அகற்றி அறிவிப்பான் எவன் அப்
போர்த்த கருணைக் கணபதியைப் புகழ்ந்து சரணம் அடைகின்றோம். || 4 ||

செய்யும் வினையின் முதல்யாவன் செய்யப்படும் அப்பொருள் யாவன்
ஐய்யம் இன்றி உளதாகும் அந்தக் கருமப் பயன் யாவன்
உய்யும் வினையின் பயன் விளைவில் ஊட்டி விடுப்பான் எவன்
அந்தப் பொய்யில் இறையைக் கணபதியைப் புரிந்து சரணம் அடைகின்றோம். || 5 ||

வேதம் அளந்து அறிவரிய விகிர்தன் யாவன் விழுத்தகைய
வேத முடிவில் நடம் நவிலும் விமலன் யாவன் விளங்குபர
நாதமுடிவில் வீற்றிருக்கும் நாதன் எவன் எண்குணன் எவன் அப்
போத முதலைக் கணபதியைப் புகழ்ந்து சரணம் அடைகின்றோம். || 6 ||

மண்ணில் ஓர் ஐங்குணமாகி வதிவான் எவன் நீரிடை நான்காய்
நண்ணி அமர்வான் எவன் தீயின் மூன்றாய் நவில்வான் எவன் வளியின் 
எண்ணும் இரண்டு குணமாகி இயைவான் எவன் வானிடை ஒன்றாம்
அண்ணல் எவன் அக்கணபதியை அன்பிற் சரணம் அடைகின்றோம். || 7 ||

பாச அறிவில் பசுஅறிவில் பட்றற்கரிய பரன்யாவன்
பாச அறிவும் பசுஅறிவும் பயிலப் பணிக்கும் அவன்யாவன்
பாச அறிவும் பசுஅறிவும் பாற்றி மேலாம் அறிவான
தேசன் எவன் அக்கணபதியைத் திகழச் சரணம் அடைகின்றோம். || 8 ||

நூற்பயன்

இந்த நமது தோத்திரத்தை யாவன் மூன்று தினமும் உம்மைச்
சந்தி களில்தோத் திரஞ்செயினும் சகல கரும சித்திபெறும்
சிந்தை மகிழச் சுகம்பெறும்எண் தினம்உச் சரிக்கின் சதுர்த்தியிடைப்
பந்தம் அகல ஓர்எண்கால் படிக்கில் அட்ட சித்தியுறும். || 9 ||


திங்கள் இரண்டு தினந்தோறும் திகழஒருபான் முறையோதில்
தங்கும் அரச வசியமாம் தயங்க இருபத் தொருமுறைமை
பொங்கும் உழவ லால்கிளப்பின் பொருவின் மைந்தர் விழுக்கல்வி
துங்க வெறுக்கை முதற்பலவும் தோன்றும் எனச் செப்பினர் மறைந்தார். || 10 ||

மேற்கண்ட காரியசித்திமாலையை தொடர்ந்து 3 நாட்கள் சூரிய உதயத்திற்கு முன்பாகவும், சூரியன் மறைந்த பின்பும் 1 முறை பாராயணம் செய்தால் அவர்கள் செய்யும் செயல்களில் (நல்ல செயல்கள்) தோல்வி என்பதே இல்லாமல் வெற்றி கிட்டும். கெட்ட செயல்கள் செய்தால் விளைவு எதிர்மறையாகத் தான் இருக்கும்.

தொடர்ந்து 8 நாட்கள் படித்து வர மன உளைச்சல் நீங்கி நிம்மதியை பெறுவர். சக்தியின் மைந்தன் விநாயகர் உங்களின் மன துன்பங்களை அறவே நீக்குவார். மனநிம்மதியில்லாதவர்கள் இதை படித்து வந்தால் மனநிம்மதி பெறுவர் என்பது திண்ணம்.

சதுர்த்தி நாளில் நல்ல சிந்தனையுடன் 8 முறை இதை படித்து வர அட்டமாசித்திகளும் கிட்டும். தொடர்ந்து 60 நாட்கள் விடாமல் 1 முறை இதை படித்து வர அரச வசியம் உண்டாகும். தினமும் 21 முறைகள் படித்து வர குழந்தைச் செல்வம் மற்றும் கல்விச் செல்வம் கிட்டும்.

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

காரிய சித்தி மாலை பொருள் & பயன்கள்

பந்தம் அகற்றும் அனந்தகுணப் பரப்பும் எவன்பால் உதிக்குமோ
எந்த உலகும் எவனிடத்தில் ஈண்டி இருந்து கரக்குமோ
சந்தமறை ஆகமங் கலைகள் அனைத்தும் எவன்பால் தகவருமோ
அந்த இறையாம் கணபதியை அன்பு கூரத் தொழுகின்றோம். || 1 ||
(எல்லாவிதமான பற்றுகளை அறுத்தும், நற்குணங்களின் உற்பத்தியிடமாகவும், இவ்வுலகையே உண்டாக்கியும், காத்தும், மறைத்தும், லீலைகள் செய்பவனும், வேதங்களுக்கும் ஆகமங்களுக்கும் அறுபத்துநான்கு கலைகளுக்கும் தலைவனாக இருக்கும் முழு முதற்கடவுளாம் விநாயகப்பெருமானை அன்புடன் தொழுகின்றோம்.)

உலகம் முழுதும் நீக்கமற ஒன்றாய் நிற்கும் பொருள் எவன் அவ்
உலகிற் பிறக்கும் விகாரங்கள் உறாதமேலாம் ஒளியாவன்
உலகம் புரியும் வினைப் பயனை ஊட்டும் களைகண் எவன் அந்த
உலகு முதலைக் கணபதியை உவந்து சரணம் அடைகின்றோம். || 2 ||
(எல்லா உலகங்களையும் நீக்கமற ஒருவனாய் நின்று காப்பவர். உலகில் நிகழும் மாற்றங்களுக்கு அப்பால் ஆனவர். மேலாம் ஒளியானவர். உலக உயிர்களின் வினைப் பயனைக் களைபவர். அவரே பெருந்தெய்வம் கணபதி ஆவார். அப் பெருந்தெய்வத்தின் திருவடிகளை மகிழ்வோடு சரணடைவோம்.)

இடர்கள் முழுதும் எவனருளால் எரிவீழும் பஞ்சென மாயும்
தொடரும் உயிர்கள் எவனருளால் சுரர்வாழ் பதியும் உறச்செய்யும்
கடவுள் முதலோர்க் கூறின்றிக் கருமம் எவனால் முடிவுறும் அத்
தடவுமருப்புக் கணபதி பொன் சரணம் சரணம் அடைகின்றோம். || 3 ||
(நம் துன்பங்கள் முழுவதும் யார் திருவருளால் தீயில் விழுந்த பஞ்சு போல் பொசுங்குமோ, உலக உயிர்களை யார் அமரர் உலகில் சேர்ப்பிப்பாரோ, எக்கடவுள் திருவருளால் நாம் செய்த பாவங்கள் தொலையுமோ அந்த நீண்ட தந்தங்களையுடைய கணபதியின் பொன்னான திருவடிகளை சரணடைகின்றோம்.)

மூர்த்தியாகித் தலமாகி முந்நீர் கங்கை முதலான
தீர்த்தமாகி அறிந்தறியாத் திறத்தினாலும் உயிர்க்கு நலம்
ஆர்த்திநாளும் அறியாமை அகற்றி அறிவிப்பான் எவன் அப்
போர்த்த கருணைக் கணபதியைப் புகழ்ந்து சரணம் அடைகின்றோம். || 4 ||

(எல்லா மூர்த்தங்களுக்கும் மூல மூர்த்தமாக இருப்பவரும், எல்லா ஊர்களிலும் எழுந்தருளி இருப்பவரும், கங்கை முதலான எல்லா நதிகளிலும் நிறைந்திருப்பவரும், எல்லாவற்றையும் அறிந்தும் ஏதும் அறியாதார் போல் இருப்பவரும், எல்லா உயிர்களுக்கும் நாளும் நலம் புரிபவரும், அறியாமையை அகற்றி நல்லறிவைத் தருபவருமாகிய கணபதிப் பெருமானின் திருவடிகளைப் புகழ்ந்து நாம் சரணடைவோம்.)

செய்யும் வினையின் முதல்யாவன் செய்யப்படும் அப்பொருள் யாவன்
ஐயமின்றி உளதாகும் அந்தக் கருமப் பயன் யாவன்
உய்யும் வினையின் பயன் விளைவில் ஊட்டி விடுப்பான் எவன்
அந்தப் பொய்யில் இறையைக் கணபதியைப் புரிந்து சரணம் அடைகின்றோம். || 5 ||

(செயல்களாகவும், செயப்படும் பொருள்களாகவும் இருப்பவர். எல்லா பொருள்களிலும் நீக்கமற நிறைந்திருப்பவர். நாம் செய்யும் வினைப்பயனாக இருப்பவர். அவ்வினைப் பயன்களில் இருந்து நம்மை விடுவிப்பவர். அவரே முழுமுதற் கடவுள் கணபதி ஆவார். அந்த மெய்யான தெய்வத்தை நாம் சரணடைவோம்.)

வேதம் அளந்து அறிவரிய விகிர்தன் யாவன் விழுத்தகைய
வேத முடிவில் நடம் நவிலும் விமலன் யாவன் விளங்குபர
நாதமுடிவில் வீற்றிருக்கும் நாதன் எவன் எண்குணன் எவன் அப்
போத முதலைக் கணபதியைப் புகழ்ந்து சரணம் அடைகின்றோம். || 6 ||

(வேதங்களுக்கு எல்லாம் தலைவராக இருப்பவரும், யாவராலும் அறிந்து கொள்வதற்கு அரிய மேலானவனாக இருப்பவரும், வேதத்தின் முடிவாக இருந்து நடம்புரியும் குற்றமற்றவரும், வெட்ட வெளியில் எழும் ஓங்காரத்தின் ஒலி வடிவாக இருப்பவர். தன்வயத்தனாதல், தூய உடம்பினன் ஆதல், இயற்கை உணர்வினன் ஆதல், முற்றும் உணர்தல், இயல்பாகவே பாசங்களிலிருந்து நீங்குதல், பொருள் உடைமை, முடிவில் ஆற்றல் உடைமை, வரம்பில் இன்பம் உடைமை ஆகிய எட்டு குணங்களை கொண்டவனுமான முழு முதற்கடவுளாம் விநாயகப் பெருமானின் திருவடிகளை சரணடைகின்றோம்.)

மண்ணின் ஓர் ஐங்குணமாகி வதிவான் எவன் நீரிடை நான்காய்
நண்ணி அமர்வான் எவன் தீயின் மூன்றாய் நவில்வான் எவன் வளியின் 
எண்ணும் இரண்டு குணமாகி இயைவான் எவன் வானிடை ஒன்றாம்
அண்ணல் எவன் அக்கணபதியை அன்பிற் சரணம் அடைகின்றோம். || 7 ||
(மண்ணில் ஐந்து வகையாக (குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை) இருப்பவரும், ஆற்று நீர், ஊற்று நீர், மழை நீர், கடல் நீர் என நான்காக இருப்பவரும், வேள்வித்தீ, சூரியன், சந்திரன் எனத் தீயில் மூன்றாக இருப்பவரும், காற்றில் புயற் காற்றாக இருப்பவரும், எங்கும் ஒன்றாய் இருக்கும் வான் வெளியாய் இருப்பவருமாகிய விநாயகப் பெருமானின் திருவடிகளை அன்புடன் சரணடைகின்றோம்.)

பாச அறிவில் பசுஅறிவில் பட்றற்கரிய பரன்யாவன்
பாச அறிவும் பசுஅறிவும் பயிலப் பணிக்கும் அவன்யாவன்
பாச அறிவும் பசுஅறிவும் பாற்றி மேலாம் அறிவான
தேசன் எவன் அக்கணபதியைத் திகழச் சரணம் அடைகின்றோம். || 8 ||

(எந்தப் பந்தமும் அற்றவன். பசுவாகிய ஆன்மாவும், பதியாகிய இறைவனும் அவனே! அறிவினால் அவனை அறிய முடியாது. அவன் பந்தமே இல்லாதவன். அனால் எல்லா உயிர்களையும் பந்தப் படுத்துபவன். அவன் மேலானவன். அறிவுடையவன். அத்தகைய கணபதியை நாம் சரணடைவோம். பசு, பதி இரண்டுமே இறைவன். பசு, பதியோடு ஒடுங்குவதே அழியா இனப நிலையாகும். இதையே துரியம், துரியாதீதம் என்று சைவ சித்தாந்தம் கூறும்.)

நூற்பயன்
இந்த நமது தோத்திரத்தை யாவன் மூன்று தினமும் உம்மைச்
சந்தி களில்தோத் திரஞ்செயினும் சகல கரும சித்திபெறும்
சிந்தை மகிழச் சுகம்பெறும்எண் தினம்உச் சரிக்கின் சதுர்த்தியிடைப்
பந்தம் அகல ஓர்எண்கால் படிக்கில் அட்ட சித்தியுறும். || 9 ||

திங்கள் இரண்டு தினந்தோறும் திகழஒருபான் முறையோதில்
தங்கும் அரச வசியமாம் தயங்க இருபத் தொருமுறைமை
பொங்கும் உழுவ லால்கிளப்பின் பொருவின் மைந்தர் விழுக்கல்வி
துங்க வெறுக்கை முதற்பலவும் தோன்றும் எனச் செப்பி மறைந்தார். || 10 ||

இத்தோத்திரப் பாடல்களை மூன்று நாட்கள் சந்தியா நேரத்தில் யார் பாராயணம் செய்கின்றார்களோ, அவர்கள் செய்யும் நற்காரியங்களில் வெற்றி பெறுவார்கள்.
 தொடர்ந்து எட்டு நாட்களில் படித்தால் மனம் மகிழும் படியான நலம் பெறுவார்கள்.
சதுர்த்தியன்று நற்சிரத்தையுடன் எட்டுத்தடவைகள் பாராயணம் செய்தால் அணிமா, மகிமா, லகுமா, கரிமா, பிராப்தி, பிராகாமியம், ஈசத்துவம், வசித்துவம் போன்ற (எட்டு) அஷ்டமா சித்திகளையும் பெறுவார்கள்.
=================================================================

No comments:

Post a Comment